Friday, May 7, 2010

திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனத்தில் பாரபட்சம் - ஆந்திர மாநில மனித உரிமை கமிஷனில் வக்கீல் புகார்!!!

ஆந்திர மாநில மனித உரிமை கமிஷன் தலைவர் சுபாஷன் ரெட்டி. இவரிடம் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் மூர்த்தி ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு உலகின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள்.

இங்கு தரிசனம் செய்ய வரும் வி.ஐ.பி. பக்தர்கள் மிகவும் மரியாதையாக நடத்தப்படுகிறார்கள். ஆனால் சாதாரண பக்தர்களை இங்கு கேவலமாக நடத்துகிறார்கள்.

ஆயிரக்கணக்கில் செலவு செய்து சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சாமியை பார்த்து தரிசனம் செய்யும் முன்பு ஓரிரு வினாடிகளில் இழுத்து தள்ளி விடுகிறார்கள். பெண் பக்தர்கள் என்று கூட பார்ப்பதில்லை.

அதேபோல் கியூ காம்ப்ளக்சுகளில் பக்தர்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைக்கிறார்கள். கூட்டம் இல்லாத நாட்களில் கூட பக்தர்களை அடைத்து வைத்து திடீரென திறந்து விடுகிறார்கள். இது பக்தர்களின் மனதை புண்படுத்துவதுபோல் உள்ளது. இது மனித உரிமையை மீறிய செயலாகும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறி இருந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிற 22-ந்தேதிக்குள் அறிக்கை தருமாறு திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி கிருஷ்ணாராவுக்கு, மனித உரிமை கமிஷன் தலைவர் சுபாஷன் ரெட்டி நோட்டீஸ் அனுப்பினார்.

No comments:

Post a Comment